Showing posts with label மரண சாசனம். Show all posts
Showing posts with label மரண சாசனம். Show all posts

Tuesday, December 25, 2007

வக்ஃப் செய்வது பற்றி..

1056. (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) கையில் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்களும் 'அதை (எவருக்கும்) விற்கக் கூடாது அன்பளிப்பாக வழங்கக் கூடாது வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது' என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர், அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தனக்கென்று) சேகரித்து வைக்காமல், படாடோபமாகச் செலவிடாமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்.)

புஹாரி :2737 இப்னு உமர் (ரலி).

Monday, December 24, 2007

மரணித்தவருக்காக செய்யும் தர்மங்கள் பலனளிப்பது பற்றி..

1055. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்'' என்றனர்.

புஹாரி :1388 ஆயிஷா (ரலி).

Sunday, December 23, 2007

மொத்த சொத்தில் முன்றில் ஒரு பங்கு வசிய்யத் செய்

1053. இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'வேண்டாம்'' என்றார்கள். பின்னர் நான் 'பாதியைக் கொடுக்கட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், 'வேண்டாம்; மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம்தான்; ஏனெனில், உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறை உவப்பையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கிற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகிற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நண்மையுண்டு'' என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! (என்னுடைய தோழர்களெல்லாம் மதீனாவுக்குச் செல்வார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின் தங்கியவனாக ஆகிவிடுவேனே!' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீர் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உம்முடைய அந்தஸ்தும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்' எனக் கூறிவிட்டு, 'உம்மை வைத்துச் சில கூட்டத்தினர் நன்மையடைவதற்காகவும் மற்ற சிலர் துன்பம் அடைவதற்காகவும் நீர் இங்கேயே தங்க வைக்கப்படலாம்'' என்று கூறிவிட்டு, 'யாஅல்லாஹ்! என்னுடைய தோழர்களின் ஹிஜ்ரத்தைப் பூரணமாக்குவாயாக! அவர்களைத் தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்திய இணைவைக்கும் மார்க்கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே.'' எனப் பிரார்த்தித்தார்கள். நோயாளியிருந்த ஸஅத் இப்னு கவ்லா (ரலி) மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக 'பாவம் ஸஃது இப்னு கவ்லா (அவர் நினைத்து நடக்கவில்லை)'' என்று நபி (ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.

புஹாரி :1295 ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி).


1054. மக்கள் (தம் மரண சாசனங்களை) நான்கிலொரு பாகமாகக் குறைத்துக் கொண்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம் தான்'' என்று கூறினார்கள்.


புஹாரி :2743 இப்னு அப்பாஸ் (ரலி).

Saturday, December 22, 2007

மரண சாசனம்

1052. (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2738 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) .