Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Friday, October 03, 2008

அன்ஸாரிகளில் சிறந்தோர்.

1633. ''அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பிறகு பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பமாகும். பிறகு பனூ சாஇதா குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் எங்களை விட (வேறு சில குலங்களைச்) சிறப்பித்துக் கூறினார்கள் எனக் காண்கிறேன்'' என்று கூறினார்கள். அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் (இங்கே குறிப்பிடப்படாத மற்ற) பலரையும் விட உங்களைச் சிறப்பித்துக் கூறினார்கள்'' என்று சொல்லப்பட்டது.

புஹாரி :3789 அபூஉஸைத் (ரலி).

1634. ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அவர்கள் என்னை விட வயதில் பெரியவராக இருந்தும் எனக்குப் பணிவிடை செய்து வந்தார்கள். ('வேண்டாம்' என நான் மறுத்த போது) 'அன்சாரிகள் ஓர் உயர்ந்த காரியத்தைச் செய்வதை பார்த்திருக்கிறேன்; எனவே, அவர்களில் எவரை நான் கண்டாலும் (அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) அவர்களை கண்ணியப்படுத்தாமல் இருப்பதில்லை'' என்று ஜரீர் (ரலி) கூறினார்.

புஹாரி : 2888 அனஸ் (ரலி).

1635. அஸ்லம் குலத்தை அல்லாஹ் அமைதி விரும்பியாக ஆக்குவானாக! கிஃபார் குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

புஹாரி : 3514 அபூஹூரைரா (ரலி).

1636. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் (உரை மேடையின்) மீதிருந்தபடி, 'கிஃபார்' குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! 'அஸ்லம்' குலத்தை அல்லாஹ் (போரை விரும்பாத) அமைதி விரும்பியாக ஆக்குவானாக! 'உஸைய்யா' குலம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டது'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3513 இப்னு உமர் (ரலி).

1637. குறைஷிகளும், அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3504 அபூஹுரைரா (ரலி).

1638. அஸ்லம், கிஃபார் ஆகிய குலங்களும் முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலங்களில் சிலரும் - அல்லது ஜுஹைனா அல்லது முஸைனா ஆகிய குலங்களில் சிலரும் அல்லாஹ்விடம் அல்லது மறுமை நாளில் அஸத், தமீம், ஹவாஸின் மற்றும் கத்ஃபான் ஆகிய குலங்களை விடச் சிறந்தவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3516 அபூ ஹுரைரா (ரலி)

1639. அக்ராஉ இப்னு ஹாபிஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், 'தங்களிடம் (இஸ்லாத்தை ஏற்றதாக) உறுதிமொழி கொடுத்தவர்கள் எல்லாம் ஹஜ் செய்ய வருபவர்களிடம் திருடியவர்களான அஸ்லம், கிஃபார் மற்றும் முஸைனா குலங்களைச் சேர்ந்தவர்கள் தாம்'' என்று கூறினார்கள். 'மற்றும் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்தவர்களும்' என்றும் (நபியவர்கள் கூறினார்கள் என) அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா அறிவித்தார் என்று மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு அபீ யஅகூப் சந்தேகத்துடன் கூறுகிறார். நபி (ஸல்) அவர்கள், 'பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அஸத், மற்றும் பனூ கத்ஃபான் ஆகிய குலங்களை விட அஸ்லம், கிஃபார் மற்றும் முஸைனா குலத்தார் சிறந்தவர்கள் அல்லவா? அவர்கள் நஷ்டமும் இழப்பும் அடைந்து விட்டார்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அக்ரஉ இப்னு ஹாபிஸ் (ரலி), 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (அஸ்லம், கிஃபார், முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலத்தினரான) இவர்கள் (பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அஸத் மற்றும் பனூ கத்ஃபான் ஆகிய) அவர்களை விடச் சிறந்தவர்களே'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3516 அபூபக்ரா (ரலி).

1640. துஃபல் இப்னு அம்ர் அத்தவ்ª (ரலி) அவர்களும் அவர்களின் தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (எங்கள்) 'தவ்ஸ்' குலத்தார் மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து) விட்டார்கள். அவர்களுக்குக் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, 'தவ்ஸ் குலத்தார் அழியட்டும்'' என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.

புஹாரி : 2937 அபூஹூரைரா (ரலி).

1641. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், 'அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் உம்மத்தினரிலேயே அதிகக் கடுமையுடன் தஜ்ஜாலை எதிர்த்துப் போராடுவார்கள்'' என்று கூறினார்கள். (ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தருமப் பொருள்கள் வந்தபோது இறைத்தூதர், 'இவை எங்கள் இனத்தாரின் தருமப் பொருள்கள்'' என்று கூறினார்கள். (ஒரு முறை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் பனூ தமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'நீ இந்தப் பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2543 அபூஹூரைரா (ரலி).

1642. மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றால். இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் அவர்களில் அதிகமாக இதை வெறுப்பவர்கள் தாம். மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரண்டு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3493-3494 அபூஹுரைரா (ரலி)

Thursday, September 25, 2008

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)அவர்களின் சிறப்புகள்.

1614. நபி(ஸல்) அவர்கள் பூமியின் மீது நடந்து செல்லும் எவரையும், 'இவர் சொர்க்கவாசி'' என்று சொல்லி நான் கேட்டதில்லை. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களைத் தவிர, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களைக் குறித்தே, 'மேலும், இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து சாட்சி சொல்பவர் ஒருவர் இது போன்ற வேதத்திற்கு சாட்சி கூறினார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்'' என்னும் (திருக்குர்ஆன் 46:10) இறைவசனம் அருளப்பட்டது.

புஹாரி : 3812 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

1615. நான் மதீனாவின் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழர்கள் சிலருடன்) அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் தம் முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளத்துடன் உள்ளே வந்தார். மக்கள், 'இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். அவர் இரண்டு ரக்அத்துகள் தொழுதார். அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று, 'நீங்கள் பள்ளி வாசலுக்குள் நுழைந்தபோது மக்கள், 'இவர் சொர்க்கவாசி' என்று கூறினர்'' என்றேன். அதற்கு அவர் கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையல்ல. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக் கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன். அதாவது, நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பது போன்று கண்டேன் - அறிவிப்பாளர் கூறுகிறார்: அம்மனிதர் அதன் விசாலத்தையும் பசுமையையும் வர்ணித்தார் - அதன் நடுவே இரும்பாலான தூண் இருந்தது. அதன் அடிப்பகுதி பூமியில் இருந்தது. மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் மேற்பகுதியில் பிடி ஒன்று இருந்தது. என்னிடம், 'இதில் ஏறு'' என்று சொல்லப்பட்டது. நான், 'என்னால் இயலாதே'' என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள் ஒருவர் வந்து என் ஆடையைப் பின்னாலிருந்து உயர்த்தி விட்டார். உடனே நான் (அதில்) ஏறினேன். இறுதியில் அதன் மேற்பகுதிக்கு நான் சென்றுவிட்டபோது அந்தப் பிடியை நான் பற்றினேன். உடனே என்னிடம், 'நன்கு பற்றிப் பிடித்துக் கொள்'' என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றினேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க (திடுக்கிட்டு) நான் விழித்தெழுந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, 'அந்தப் பூங்கா இஸ்லாமாகும். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறை நம்பிக்கை என்னும்) பிடியாகும். எனவே, நீங்கள் இறங்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்'' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள் (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) தாம்.

புஹாரி : 3813 கைஸ் பின் உபாத் (ரலி).

Thursday, August 28, 2008

நபி யூஸூஃப் (அலை)அவர்களின் சிறப்பு.

1538. (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், 'மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்'' என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், 'நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை'' என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் (யஅகூப்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!'' என்று பதிலளித்தார்கள் அதற்கு மக்கள், நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை'' என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், 'அரபுகளின் (பரம்பரையான) கரங்களைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்திலும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3353 அபூ ஹுரைரா(ரலி).

Tuesday, July 29, 2008

கனவுகளுக்கு விளக்கமளித்தல்.

1462. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, '(இறைத்தூதர் அவர்களே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்றீர்கள் . பிறகு இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அவர் மேலே சென்றார்.பின்னர் வேறொருவர் அதன்பின் நான்காவதாக ஒருவர் அக்கயிற்றைப்பற்ற அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது'' என்றார்.அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தைதங்களுக்குஅர்ப்பணம் ஆகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் '(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்'' என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், 'அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும்குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்தி விடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப பின்பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்'' என்று கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்'' என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டும்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் '(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)'' என்றார்கள்.

புஹாரி : 7046 இப்னுஅப்பாஸ் (ரலி).

Wednesday, May 21, 2008

இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் உண்ணுகிறான்.

1334. இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; 'இறைமறுப்பாளன்' அல்லது 'நயவஞ்சகன்' ஏழு குடல்களில் சாப்பிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5394 இப்னு உமர்(ரலி).

1335. ஒருவர் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றார். (அதிலிருந்து) குறைவாக உண்பவராகிவிட்டார். இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அவர்கள், 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்'' என்று கூறினார்கள்.

புஹாரி :5397 அபூஹூரைரா (ரலி).

Tuesday, February 26, 2008

ஹெர்குலிஸூக்கு இஸ்லாத்தைத் தழுவ நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.

1162. அபூ சுஃப்யான்(ரலி) தம் வாய்ப்பட எனக்கு அறிவித்தாவது: (குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குமிடையிலான (ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வாணிபக் குழுவினருடன் ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் நாட்டில் இருந்துகொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களிடமிருந்து (ரோம பைஸாந்தியப் பேரரசர் சீசர்) ஹெராக்ளியஸிற்கு நிருபமொன்று கொண்டுவரப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து 'திஹ்யா அல் கல்பீ' அவர்கள் கொண்டு வந்து, 'புஸ்ரா'வின் அரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக்ளியஸிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அப்போது ஹெராக்ளியஸ் (தம்மைச்சூழ அமர்ந்திருந்த பிரதிநிதிகளிடம்) 'தம்மை இறைவனின் தூதரெனக் கூறிக்கொண்டிருக்கும் இந்த மனிதரின் (முஹம்மதின்) சமுதாயத்தைச் சேர்ந்த எவரேனும் இங்கு (நம் நாட்டில்) இருக்கிறார்களா?' என்று கேட்டதற்கவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். அப்போது (ஷாமில் வியாபாரத்திற்காகத் தங்கயிருந்த) நான் குறைஷியர் சிலருடன் அழைக்கப்பட்டேன். எனவே, நாங்கள் ஹெராக்ளியஸிடம் சென்றோம். அவர் முன்னிலையில் (அரசவையில்) எங்களை அமரச் செய்தார்கள். அப்போது ஹெராக்ளியஸ், 'தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?' என்று கேட்டதற்கு நான், 'நான் (தான் நெருங்கிய உறவினன்)'' என்று சொன்னேன். எனவே, அவரின் முன்னிலையில் என்னை அமர்த்தினார். என் சகாக்களை எனக்குப் பின்னால் அமர்த்தினார். பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்து (அவரிடம்), 'தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மனிதரைப் பற்றி இவரிடம் கேட்கப் போகிறேன்; இவர் என்னிடம் பொய் சொன்னால் (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல்'' என்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் பொய் சொன்னால் அதை என் சகாக்கள் தெரிவித்து விடுவார்கள் என்பது (குறித்த அச்சம்) மட்டும் இல்லாதிருந்தால் (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நான் பொய்(யான விவரங்களைச்) சொல்லியிருப்பேன்.

பிறகு, ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், 'உங்களிடையே அந்த மனிதரின் குடும்பப் பாரம்பரியம் எப்படிப்பட்டது? என்று இவரிடம் கேள்'' என்று கூறினார். நான், 'அவர் எங்களிடையே சிறந்த குடும்பப் பாரம்பரியத்தை உடையவராவார்'' என்று பதிலளித்தேன். ஹெராக்ளியஸ் 'அவரின் முன்னோர்களில் அரசர் எவராவது இருந்திருக்கிறாரா?' என்று கேட்டார். நான் 'இல்லை'' என்று சொன்னேன். ஹெராக்ளியஸ் 'அவர் தம்மை 'நபி' என வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் கூறினார் என்று (எப்போதாவது) நீங்கள் சந்தேகித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். நான், 'இல்லை'' என்று சொன்னேன். 'அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?' என்று கேட்டார். நான், 'இல்லை; பலவீனமானவர்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர்'' என்றேன். அவர், 'அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனரா? அல்லது குறைந்துகொண்டே போகின்றனரா?' என்று கேட்டார். நான் 'இல்லை அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்'' என்று சொன்னேன். அவர், 'அவரின் மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் தம் பழைய மதத்திற்கே திரும்பிச் செல்வதுண்டா?' என்று கேட்டார். நான், 'இல்லை'' என்று சொன்னேன்.அவர், 'அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?' என்று கேட்டார். நான், 'உண்டு'' என்று சொன்னேன். அவர், 'அவ்வாறாயின், அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எவ்வாறு இருந்தன?' என்று கேட்டார். நான், எங்களிடையேயான போர்கள் (கிணற்று) வாளிகள்தாம். (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒரு முறை) அவர் எங்களை வெற்றிகொள்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெற்றி கொள்வோம்'' என்று சொன்னேன்.அவர், 'அந்த மனிதர் வாக்கு மீறுகிறாரா?' என்று கேட்டார். நான், 'இல்லை. (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது'' என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. (பிறகு) அவர், 'இவருக்கு முன்னால் (குறைஷியரில்) வேறு எவரேனும் இப்படி (தம்மை 'நபி' என) வாதித்ததுண்டா?' என்று கேட்டார். நான், 'இல்லை'' என்று சொன்னேன்.

பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரிடம் (இவ்வாறு) கூறினார்: 'அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம் உங்களிடையே அவரின் குடும்பப் பாரம்பரியம் குறித்துக் கேட்டேன். அவர் சிறந்த பாரம் பரியத்தைச் சேர்ந்தவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் சிறந்த பாரம் பரியத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார். நான் உம்மிடம் அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கு நீர் 'இல்லை' என்றீர். அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருப்பாராயின், 'தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும் அடைய) விரும்பும் ஒருவர் இவர்' என்று கூறியிருப்பேன். ''மக்களில் அவரைப் பின்பற்றுபவர்கள் மேட்டுக்குடியினரா? அல்லது பலவீனமானவர்களா?' என்று அவரைப் பின்பற்றுபவர்களைக் குறித்துக் கேட்டேன். அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள் தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர். நான் உம்மிடம் 'அவர் தம்மை 'நபி' என வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீர் 'இல்லை'' என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேசா(த் துணிய)த அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன். உம்மிடம் நான் 'அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரில் எவராவது தம் (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்திகொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு 'இல்லை' என்றீர். இறை நம்பிக்கை இத்தகையதே! உள்ளத்தின் எழிலோடு அது கலந்துவிடும்போது (அதைக் குறித்து யாரும் வெறுப்படையமாட்டார்.) உம்மிடம் நான் 'அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின்றனரா? அல்லது குறைந்து வருகின்றனரா?' என்று கேட்டேன், நீர் 'அதிகரித்தே வருகின்றனர்' என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை அத்தகையது தான். அது முழுமையடையும் வரை (அதிகரித்துக்கொண்டே செல்லும்).

மேலும், உம்மிடம் நான் 'அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீங்கள் போர் புரிந்தீர்கள் என்றும், உங்களுக்கும் அவருக்குமிடையே போர் கிணற்று வாளிகள் தாம்; (போரில் வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன என்றும், (ஒரு முறை) அவர் உங்களை வெற்றி கொண்டால் (மறு முறை) நீங்கள் அவரை வெற்றிகொள்கிறீர்கள் என்றும் பதிலளித்தீர். இறைத்தூதர்கள் அப்படித்தான் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும். 'அவர் வாக்கு மீறுகிறாரா?' என்று உம்மை நான் கேட்டதற்கு நீர், 'அவர் வாக்கு மீறுவதில்லை' என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையவர்களே; அவர்கள் வாக்கு மீறுவதில்லை. நான் 'இவருக்கு முன் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா?' என்று உம்மிடம் கேட்டபோது நீர் 'இல்லை' என்று பதிலளித்தீர். அவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்திருந்ததாக (நீர் கூறி) இருப்பின், 'தமக்கு முன்னர் (சிலரால்) முன் வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் செல்கிற ஒருவர் இவர்' என நான் சொல்லியிருப்பேன்'' என்று கூறினார்.

பிறகு ஹெராக்ளியஸ், 'என்ன செய்யும் படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுகிறார்?' என்று கேட்டார். நான், 'தொழுகையை நிறைவேற்றும்படியும், தர்மம் செய்யும் படியும், உறவைக் காத்துவரும்படியும், ஒழுக்கமாக வாழும்படியும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகிறார்'' என்று சொன்னேன். ஹெராக்ளியஸ், 'அவரைக் குறித்து நீர் சொன்னவை அனைத்தும் உண்மையானால், அவர் இறைத்தூதர் தாம். அவர் வரப்போகிறார் என்று நான் அறிந்துவைத்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷிகளாகிய) உங்களிலிருந்து வருவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க நான் விரும்புவேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன். அவரின் ஆட்சி (ஒரு காலத்தில்) என் இரண்டு பாதங்களுக்குக் கீழுள்ள (இந்த) இடத்தையும் எட்டியே தீரும்'' என்று கூறினார். பிறகு ஹெராக்ளியஸ் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டு வரப்பட்டது.) அதை அவர் வாசிக்கச் செய்தார்.

அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

அளவிலா அருளும் நிகரிலா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது இறைத்தூதர் முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்பட்ட நிருபம்:)
நேர்வழியைப் பின்பற்றியவர் மீது (இறைவனின்) சாந்தி நிலவட்டும். இஸ்லாத்தை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். (ஏற்றால், ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குச் சேர வேண்டிய நன்மையை இரண்டு மடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (குடிமக்களான) விவசாயிகளின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதின் குற்றமும்) உங்களையே சாரும். 'வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அது யாதெனில்:) 'அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது. அவனுக்கு எதனையும் நான் இணை வைக்கலாகாது. அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால், 'நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிகிறவர்கள்) முஸ்லிம்கள்தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள்' என்று கூறிவிடுங்கள்.

ஹெராக்ளியஸ் அந்த நிருபத்தைப் படித்து முடித்தபோது, அவருக்கு அருகிலேயே (அவரைச் சுற்றிலுமிருந்த ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களின்) குரல்கள் உயர்ந்தன. கூச்சல் அதிகரித்தது. எங்களை வெளியே கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டது. உடனே, நாங்கள் (அரசவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம். நாங்கள் வெளியே வந்தபோது, நான் என் சகாக்களிடம் 'இப்னு அபீ கப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் (-ரோமரின்-) மன்னரே அவருக்கு அஞ்சுகிறாரே!'' என்று சொன்னேன். (அன்று முதல்) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதிகொண்டவனாகவே இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான்.

புஹாரி 4553 இப்னு அப்பாஸ் (ரலி).